நெடுந்தீவின் வெட்டுக்களி குளம் மற்றும் பெரிய வெட்டுக்குளம் ஆகியவற்றை கடற்படையினரின் உதவியுடன் ஆழமாக்கும் பாரிய வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதற்கான நிதி உதவிகளை வழங்குகின்றது.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் இத்திட்டத்தை தொடக்கி வைத்தனர்.
முதலில் வெட்டுக்களி குளத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குளப் புனரமைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
பெரிய வெட்டுக் குளத்தை ஆழமாக்கும் பணியினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி தொடக்கி வைத்தார்
இதனைத் தொடர்ந்து பிரதேச சபைக்கும் அப்பகுதி விவசாய சம்மேளனத்திற்கும் உழவு இயந்திரங்கள் மற்றும் நீர் பவுசர்கள் வழங்கப்பட்டன.
இதேவேளை நெடுந்தீவுப் பகுதியில் பொதுமக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் வீட்டுத்திட்டங்களையும் அமைச்சரும் ஆளுநரும் பார்வையிட்டனர். அத்துடன் நெடுந்தீவு துறைமுகத்தின் ஆழமாக்கும் பணிகளையும் பார்வையிட்டதுடன் அது தொடர்பில் துறைசார்ந்தோர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.(எம்.ரி.-977)

